Saturday, March 2, 2013

பாரதியார் பாட்டு

பாரதியார் பாட்டு பகுதி 1.செந்தமிழ் நாடு ; சுயநலமில்லா ஒரே புரட்சியாளரான "பாரதியாரின் பாடல்கள்" .பாரதியின் எண்ணங்களுக்கு உயிர் கொடுப்போம்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே
எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே

வேதம் நிறைந்த தமிழ்நாடு:
உய் வீரம் செறிந்த தமிழ்நாடு
நல்ல காதல் புரியும் அரம்பையர் போல்
... இளங்கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு .

காவிரி தென்பெண்ணை பாலாறு
தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி
என மேவி யாறு பலவோடத்
திருமேனி செழித்த தமிழ்நாடு.

முத்தமிழ் மாமுனி நீள்வரையே
நின்று மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே
அவையாவும் படைத்த தமிழ்நாடு.

நீலத் திரைக்கட லோரத்திலே
நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை
வடமாலவன் குன்றம் இவற்றிடையே
புகழ்மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.

கல்வி சிறந்த தமிழ்நாடு
புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு
நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்
மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே
தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்
மணியாரம் படைத்த தமிழ்நாடு.

சிங்களம் புட்பகம் சாவக
மாதியதீவு பலவினுஞ் சென்றேறி
அங்குதங்கள் புலிக்கொடி மீன்கொடியும்
நின்றுசால்புறக் கண்டவர் தாய்நாடு.

விண்ணை யிடிக்கும் தலையிமயம்
எனும்வெற்பை யடிக்கும் திறனுடையார்
சமர்பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்
தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.

சீன மிசிரம் யவனரகம்
இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக்
கலைஞானம் படைத்தொழில் வாணிபமும்
மிகநன்று வளர்த்த தமிழ்நாடு.

வி.ராஜமருதவேல்.

No comments:

Post a Comment